டி20 உலகக் கிண்ணத்தில் திடீர் திருப்பம்! வெளியேறுகிறதா பாகிஸ்தான்?
டி20 உலகக் கிண்ணத்தில் திடீர் திருப்பம்! வெளியேறுகிறதா பாகிஸ்தான்?

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கான ஆயத்தப் பணிகளைப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதில் நிலவும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.
பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி இந்தியா செல்ல பங்களாதேஷ் தயக்கம் காட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் அதற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
அத்துடன் பங்களாதேஷின் பாதுகாப்பு கவலைகள் நியாயமானவை என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை பங்களாதேஷ் விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்படாவிட்டால், பாகிஸ்தானும் இத்தொடரில் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்யும் எனத் தெரிகின்றது.
இந்தநிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதிக்குள் இந்தியா செல்வது குறித்த இறுதி முடிவை பங்களாதேஷ் அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த தொடரிலிருந்து பங்களாதேஷ் விலகும் பட்சத்தில், தரவரிசை அடிப்படையில் ஸ்கொட்லாந்து அணி மாற்று அணியாகத் தொடரில் சேர்க்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் மைதானங்கள் போதிய அளவில் கிடைக்காவிட்டால், பங்களாதேஷின் போட்டிகளைத் தனது நாட்டில் நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
அண்மையில் 2025 செம்பியன்ஸ் கிண்ண தொடரை வெற்றிகரமாக நடத்தியதை சுட்டிக்காட்டி, தங்களால் பெரிய தொடர்களை சிறப்பாக நடத்த முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது.
எனினும், போட்டிகளுக்கான அட்டவணையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment